தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எதிர்பாராத விதமாக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக தோல்விக்கு கட்சி பிளவு தான் காரணம் என்று பொதுமக்கள் மத்தியிலும் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரவலான பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் சசிகலாவும் டிடிவி தினகரனும் அதிமுகவில் சேர்ந்தால் மட்டுமே கட்சியை பலப்படுத்த முடியும் என்று தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அதற்கான முதல் மணி அடிக்கப்பட்டு உள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சையது கான், முன்னாள் எம்பி பார்த்திபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அதிமுகவில் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். இச்சம்பவம் அரசியல் புள்ளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.