தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காய்ச்சலுடன் வகுப்பிற்கு வந்த மாணவி ஒருவரால் மேலும் 15 மாணவிகளுக்கு காய்ச்சல் தொற்றும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் 30க்கும் மேற்பட்டோர் சிறப்பு மருத்துவமுகாமை நடத்தினார்கள்.
நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் கொரோனோ தொற்று பரிசோதனை, ரத்த அழுத்தம், ஆக்சிசன் அளவு, காய்ச்சல் பரிசோதனை, டைபாய்டு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் டெங்கு காய்ச்சல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் மாணவிகளுக்கு மருந்து மாத்திரைகளும், மன அழுத்தத்தை போக்க மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 11 மற்றும் 12 வகுப்புகளை சேர்ந்த 820 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இன்று கொரோனோ பரிசோதனை செய்த மாணவிகளுக்கு நாளை முடிவுகள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.