தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தேனி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பெரியார் நினைவு ரத்ததான முகாம் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் இந்த செப்டம்பர் மாதத்தில் ,தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக இம்முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு தேனி மாவட்ட தி.க.தலைவர் ரகுநாகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் முன்னிலை வகித்தனர். கவிஞர் மஞ்சில் செல்வி வரவேற்றார். முகாமை ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் ஸ்டார் நாகராஜன் முதல் ரத்த கொடை வழங்கி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
முகாமில் பங்கேற்று ரத்ததானம் அளித்தவர்களுக்கு இலவசமாக ரத்தப் பரிசோதனையும், சான்றிதழ்களும், சத்தான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. மேலும் தொடர்ந்து பல முறை ரத்த தானம் வழங்கி சேவை புரிந்த தன்னார்வலர்களுக்கு கேடயங்களும் பரிசாக அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் வழங்கப்பட்டன. 200க்கும் மேற்பட்டவர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட இரத்தம் பாதுகாப்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.