தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிழவுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…
பொதுமக்கள் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில், “நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டாடு கேட்குமாம்” என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த திறமையற்ற ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது. விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, மாணவிகள் உள்ளிட்டோர் மீதான பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது. இதை நான் சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், செய்தியாளர்கள் பேட்டியிலும் பலமுறை சுட்டிக்காட்டியும், முதலமைச்சரோ, மூத்த அதிகாரிகளோ, காவல் துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
கடலூர் சிறையில் ஜெயிலர் கைதியிடமிருந்து செல்போன்கள் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்திருக்கிறார் என்றும், இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கைதி, உதவி ஜெயிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயிவர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுவீசி எரித்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சியில், பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் பாதுகாப்போடு இருந்ததை இப்போது உணர்கிறார்கள். மாண்புமிகு அம்மா ஆட்சியில் அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த தமிழகம், இன்றைய விடியா திமுக ஆட்சியில் அழிவுப் பாதைக்கே சென்றுவிட்டது.
இந்த ஆட்சியாளர்கள், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்தெழு வேண்டும். இல்லையென்றால், விடியா திமுக அரசை விழித்தெழ வைக்கும் அறப்போரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபடும் என்று எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.