மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர், துல்கர் சல்மான். இவர் மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். தனது நடிப்பால் நடித்த அனைத்து மொழிகளிலும் தனக்கான ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர்.
இவர் ஏற்கனவே பாலிவுட்டில் ‘கார்வான்’, ‘தி சோயா பேக்டர்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். தற்போது மற்றொரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்தப் படத்தை பாலிவுட்டில் வித்தியாசமான படங்களை கொடுத்து வரும், பால்கி இயக்குகிறார். இவர் அமிதாப்பச்சனை வைத்து ‘பா’, ‘சீனிகம்’ அகிய படங்களையும், தனுசையும், அமிதாப்பையும் இணைத்து ‘ஷமிதாப்’ என்ற படத்தையும் இயக்கி புகழ்பெற்றவர், பால்கி. இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர்கள் இணையும் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதற்கான படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து, துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் மிகவும் மாறுதலாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் இது இருக்கை நுனியில் அமர வைக்கும் ஒரு திரில்லர் படம் என்பதும் கூடுதல் தகவல்.