திருமாவளவனை நட்பு சக்தியாகவே பார்க்கிறோம் என பாஜக தலைவர் அண்ணாமலையின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதே திருமாவளவன் வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு கருத்துக்களை கூட முன் வைத்தது உண்டு. அடிப்படையில் பார்த்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திருமாவளவன் பாடுபடுகிறார். இதற்கான முறைகளும், அர்த்தங்களும் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் பா.ஜனதாவும் இதையே தான் விரும்புகிறது. திருமாவளவனுக்கும் எங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது. மிக கடுமையாக விமர்சித்து கொள்கிறோம். ஆனால் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஒரே சிந்தனையுடன் தான் பயணிக்கிறோம்.
பா.ஜனதாவில்கூட பட்டியல் இன தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட இன தலைவர்களும் வட இந்தியாவில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் அவர்களை சொல்லவில்லை. திருமாவளவன் உள்ளிட்டவர்களையும் நட்பு சக்தியாகவே பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.