

எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவில் துவங்க ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதுரையில் பேட்டி
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவ-மாணவிகள் விடுதிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மருத்துவமனை முதல்வர் இரத்தினவேல் முன்னிலை வகிக்க நடைபெற்ற அந்த ஆய்வை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் ஒரு சில மாவட்டத்தில் மட்டும் சிறிய அளவிலான பாதிப்பு உள்ளது என கூறினார்.மேலும்,மற்ற மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேலும், வெளி மாநிலத்தில் இருந்து வரும் கல்லூரி மாணவர்கள் குறித்து கண்காணிப்பு தீவிரபடுத்தபட்டுள்ளது என்ற அவர்,தமிழகம் வந்த சில மாணவர்களுக்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் இதுகுறித்து பதட்டம் அடைய தேவையில்லை என்ற அவர் நோய் தொற்று கட்டுபாட்டில் உள்ளது என்றும், மீண்டும் வராமல் இருக்க பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக விடுபட்ட தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் தானாக முன் வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறிய அவர் , 20க்கு மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை வந்துள்ளது ஆனால் குரங்கு அம்மை இதுவரை இந்தியாவில் யாருக்கும் இல்லை,தொடர்ந்து கண்கணித்து கொண்டு இருக்கிறோம் என்றார். பொதுமக்கள் நோய்த்தொற்று விசயத்தில் அலட்சியமாக இருக்காமல் அரசு கூறும் விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துமனை தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமகிருஷ்ணன்,ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இதனால் தான் தற்போது வகுப்பு இராமநாதபுரத்தில் தொடங்கபட்டுள்ளது என்றும் எய்ம்ஸ் கட்டுமான பணி விரைந்து தொடங்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றும் எய்ம்ஸ் பணி தாமதமாவது வருத்தம் அளிக்கிறது என்றாலும் பணிகள் அனைத்தும் முடிவுற்று அது செயல்பாட்டிற்கு வரும் போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்தபடியாக மதுரை எய்ம்ஸ் அமையும் என்றும் அவர் கூறினார்
மேலும், மருத்துவமனைகளில் தீ விபத்து குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும். தீ தடுப்பு நடுவடிக்கைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்தெரிவித்தார்.
