சிவகங்கையில் 25 கிலோமீட்டர் தொலைவில் கோவனூர் கிராமம் அமைந்துள்ளது . இந்தக் கிராமத்தில் மிகப் பழமையான குண்டுமணி அம்மன், சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் அமைந்துள்ள நிலையில் , சுவாமிதரிசனம் செய்ய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் வருகை தருவார்கள்.
இக்கோவில் வழியாக செல்லும் கோவானூர்- ஆத்தூர் கிராமங்களை இணைக்கும் பிரதான சாலை திருப்பாச்சேத்தி, படமாத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை இணைக்கும் பிரதான சாலையாகவும் உள்ளது.
இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக சேதமடைந்து இருப்பதால் வாகனங்களும், பொதுமக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக தெரிகிறது.
மேலும் ,ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வருவது கிடையாது எனவும் இதனால் ஆத்தூர், கோவனூர் கிராமத்தில் வசிக்கும் 1500க்கு மேற்பட்ட மக்கள் நான்கு கிலோமீட்டர் சுற்றி மாற்றுப் பாதையில் சென்று வருவதாகவும் , அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் கூட வர மறுப்பதாகவும் தெரிவித்த கிராம மக்கள், விரைவில் சாலையை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.