• Fri. Apr 26th, 2024

2 ஆண்டுகளுக்கு பின் கோலாகலமாக நடந்த திருச்செந்தூர் தேரோட்டம்…

Byகாயத்ரி

Feb 16, 2022

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது.

காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்கபெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றடைந்தனர்.நேற்று இரவு சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.மாசித் திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (16-ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 6.30 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது.

முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளிவீதி நான்கிலும் பவனி வரும் காட்சி கண்களை கொள்ளை கொண்டது.திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.

2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம் நடைபெறுவதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *