ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள கருப்புசாமி சன்னதியில் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.




