ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முஸ்லிம் மாணவர்கள் இந்து மாணவர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேசியக்கொடி பறக்க வேண்டிய இடத்தில் காவிக்கொடியை பறக்கவிட்டு கர்நாடகாகலவர பூமியாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு உலகம் முழுவதிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.