• Thu. Apr 25th, 2024

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு..

Byமதி

Dec 14, 2021

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் இன்று அதிகாலை 4.44 மணிக்கு திறக்கப்பட்டது. இதற்காக ரத்தின அங்கியில் எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.

பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. இதில் மார்கழி மாதம் 20 நாட்கள் திருவத்யயன உற்சவம் என்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடக்கும். இந்த விழா நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பகல் பத்து, இராப்பத்து என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது.
பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (13ம் தேதி) ஸ்ரீ நம்பெருமாள் மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

முக்கிய நிகழ்ச்சியான இன்று பரமபத வாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீ நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு, காலை 4.44 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியே பரமபத வாசலை கடந்து நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

கோரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பணியாளர்கள் தவிர பக்தர்களுக்கு அனுமதியில்லை. இருப்பினும் பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து ஆஸ்தானம் சேர்ந்த பின் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *