அதிமுகவை அழிக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்; இந்த இயக்கத்தின் வளர்ச்சியை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, நகர்ப்புற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும்” முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக அசாத்திய வெற்றி பெற்றது. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் இது திமுகவுக்கு உறுத்தலாகவே அமைந்து விட்டது. அத்தோடு பாஜகவும் கோவையை குறி வைத்து அங்கு முக்கியஸ்தர்களை களமிறக்கி இருக்கிறது.
கோவையில் தி.மு.க., வேரூன்ற கூடாது என்று அ.தி.மு.க., தரப்பும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை கொங்கு மண்டலத்தில் ஸ்ட்ராங்காக்க வேண்டும் என துடிக்கிறது திமுக.
இது ஒருபுறமிருக்க, தங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. அதிமுக அவ்வளவுதான் என்கிற ரேஞ்சில் பாஜக செயல்பட்டு வருவதும் அதிமுகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எத்தனை தடைகள் வந்தாலும் கோவை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்தே ஆக வேண்டும் என பல சிக்கல்களுக்கும் இடையே போராடி வருகிறார் எஸ்.பி.வேலுமணி.
இந்நிலையில்தான் ஈரோட்டில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக கொறாடா எஸ்.பி.வேலுமணி, ‘’நகர்ப்புற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றிபெறும். புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த அரசின் நலத்திட்டங்களும் எழுச்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் தான் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்கள் இயக்கமாக, மக்களுடைய பிரச்னைகளை முன்னெடுத்து வைக்கிற இயக்கமாக அதிமுக செயல்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்’’ என நம்பிக்கையை விதைத்துள்ளார்.