சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க அங்கி ஊர்வலம் வரும் 22ஆம் தேதி தொடங்கும் எனவும் மண்டல புஜை 26ஆம் தேதி நடைபெறும் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
தொடர்ந்து கொரோனா தீவிரம் குறைந்து வருவதால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் கொரோனா விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜைக்கு முதல் நாள் ஐயப்பனுக்கு சாத்த, திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி 22ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
இந்த ஊர்வலம் 25ஆம் தேதி பம்பை வந்தடையும். அங்கிருந்து பின்னர் சன்னிதானம் கொண்டு வரப்படும் தங்க அங்கிக்கு 18ஆம் படிக்கு மேல் உள்ள கொடிமரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு கோவிலுக்குள் எடுத்து சென்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு தீபாராதனை நடக்கும், மறுநாள் 26ம் தேதி மதியம் சபரிமலையில் மண்டல பூஜை துவங்கும்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள தங்க அங்கி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.