நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.9% இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
ஆனாலும், உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற பெருமையை தொடர்ந்து இந்தியா தக்கவைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல்ஜூன் வரை 20.3 சதவீதம் ஜிடிபி உயர்ந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரை 8.5 வரை வளர்ச்சி பெற்றது. ஆனால், 3-வது காலாண்டில் இரு காலாண்டுகளைவிட வளர்ச்சிக் குறைந்தது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறுகையில் “ நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% வளர்ச்சி பெறும் என முன்கூட்டியே கணித்திருந்தோம். அந்தக் கணிப்பில் மாற்றம்செய்து, நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.9% இருக்கும் என கணித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல, கொரோனா வைரஸால் கடந்த நிதியாண்டில் பல்வேறு துறைகள் பாதிப்படைந்ததால், பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதமாகக் குறைந்தது. பின்னர் திருத்தப்பட்ட அறிக்கையில் மைனஸ் 6.6சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
2020ம் ஆண்டு ஏப்ரல்-ஜூனில் மைனஸ் 23.8சதவீதமும், ஜூலை செப்டம்பரில்மைனஸ் 6.6 சதவீதமும் குறைந்தது குறி்ப்பிடத்தக்கது.
2020-21ம் நிதியாண்டின் 3-வது காலாண்டில்ஜிடிபியின் மதிப்பு ரூ.36 லட்சத்து 22ஆயிரத்து 220 கோடியாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.38 லட்சத்து 22ஆயிரத்து 159 கோடியாக அதிகரித்துள்ளது.
மூன்றாவது காலாண்டில் உற்பத்தி துறை 0.2% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் 8.4% வளர்ந்திருந்தது. வேளாண் துறை கடந்த நிதியாண்டில் 4.1% வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் 2.6 சதவீமாகக் குறைந்துள்ளது.