தமிழக – கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கனரக லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, லாரியின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் பலமாக மோதிச் சிக்கிக் கொண்டது.
ஆனால், காரின் மோதிய சத்தத்தையோ ? அல்லது பின்னால் கார் சிக்கி இருந்ததையோ ? லாரி ஓட்டுநர் கண்டுகொள்ளாமல் லாரியைத் தொடர்ந்து இயக்கிச் சென்று உள்ளார்.
இதனால் விபத்துக்கு உள்ளான கார், லாரியின் பின்புறம் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்தத் திகிலூட்டும் காட்சியை, அந்த லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு காரில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளனர்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சாலையில் வாகனங்களை இயக்கும் போது பின்னால் என்ன நடக்கிறது ? என்பதைக் கூட கவனிக்காமல் அஜாக்கிரதையாக லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் மெத்தனப் போக்கையும், அதே வேளையில் சாலையில் லாரிக்கு பின்னால் பாதுகாப்பான இடைவெளி விட்டு கவனமாக காரை இயக்காத கார் ஓட்டுநரின் தவறை சுட்டிக்காட்டியும் வாகன ஓட்டிகளும், இணையவாசிகளும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.





