கடந்த அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதியை நிறுத்தி வைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. உடனடியாக ஓய்வுப்பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நிதிப் பலன்களை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத்தலைவர் ஆ.மணிகண்டன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் அறிக்கையாக அவர் கேட்டுக் கொண்டிருப்பது…
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,
தமிழ்நாடு நிதியமைச்சர் அவர்கள் அண்மையில் TAPS திட்டம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததும், மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்திருப்பதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
13 லட்சம் குடும்பங்கள்: 5 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 8 லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளது. ₹60,000 கோடி நிதி: 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் பங்களிப்புத் தொகை CPS-ல் முடங்கியுள்ளது. மாநில அதிகாரங்கள்: பிற மாநிலங்கள் தங்கள் சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தியுள்ளன.

எங்களின் முதன்மையான கோரிக்கைகள்:
TAPS திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
பிற மாநிலங்களைப் போல தமிழ்நாடு அரசு தனது நிதி நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான முடிவை எடுக்க வேண்டும். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.





