திருப்பத்தூர் அருகே நாச்சியாபுரத்தில் தனியார் நூற்பாலை இயங்கிவருகிறது. இதில் காரைக்குடியை சேர்ந்த களஞ்சியம் என்பவர் பணிபுரிந்தார். தற்போது ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் நூற்பாலையில் 2019-ம் ஆண்டு ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் காணாமல் போயிருந்தன. இது ஆலையின் உரிமையாளர் சாய்சிதம்பரம் என்பவர் அளித்த புகாரின் பேரில் நாச்சியார்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்யவில்லை என சாய்சிதம்பரம் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இயந்திரங்கள் கொள்ளை போனதில் ஐஎன்டியுசி மாநில நிர்வாகி களஞ்சியத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து களஞ்சியத்தை கைது செய்த சிபிசிஐடி போலீஸார், அவரிடமிருந்து ரூ.13 லட்சத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.