சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‛அண்ணாத்த இமான் இசையமைத்து இருந்தார்.
இப்படம் அதிக விமர்சனங்களை சந்தித்தபோதும் உலகளவில் ரூ.200 கோடி வசூலை எட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படம் திரையரங்குகளில் வெளியாகி
50 நாட்களை கடந்துள்ளது.
இதுதொடர்பாக ரஜினி வெளியிட்ட ஆடியோ சுருக்கம் : ‛‛கொரோனா உள்ளிட்ட பல தடைகளை கடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறைய சிரமங்களுக்கு இடையே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. படம் வெளியானதும் மழை வந்து குறுக்கிட்டது.
எதிர் விமர்சனங்களும் அதிகம் வந்தன. எதிர் விமர்சனம் மற்றும் மழை ஆகியவற்றை கடந்து ‘அண்ணாத்த’ படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை என்றால் இந்த படம் இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கும்.
இதெல்லாம் பார்க்கும் போது பாட்ஷா படத்துக்கு நான் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வருது. ‛‛ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான். ஆனால் கெட்டவங்கள…” என்று கூறி சிரித்தபடி முடித்திருக்கிறார்.
இதனிடையே ‛அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் சிவா வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்திருந்த ரஜினி, தற்போது படக்குழுவினரில் இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட முக்கியமானவர்களை வீட்டுக்கு அழைத்து, தங்கச்சங்கிலி பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.