காரைக்குடியில் உள்ள ஓர் உணவகத்திற்கு சாப்பிட வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததுடன், உணவகத்தையும் கல்லூரி மாணவர்கள் சூறையாடியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ரயில்வே நிலையம் செல்லும் நூறடி சாலையில் தனியார் உணவகத்தில் தனது கணவருடன் ஒரு பெண் மதிய உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது அங்கே,கஞ்சா மற்றும் மது போதையில் வந்த 5 இளைஞர்கள் பெண்ணின் தலையிலிருந்த பூவை பறித்து ரகளைகள் ஈடுபட்டுள்ளனர். இதனை ஹோட்டல் ஊழியர் அந்தோணிசாமி தட்டிக்கேட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் அந்தோணி சாமியை கடுமையாக தாக்கி ஹோட்டலையும் சூறையாடினர். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அந்தோணிசாமி காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காரைக்குடி அழகப்பபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தில் ஈடுபட்டது காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் தேவகோட்டை, பகுதியை சேர்ந்த சல்மான்கான், ஹரி, அசோக், மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த நிசோக் என தெரியவந்தது. இதனையடுத்து, அழகப்பாபுரம் பகுதியில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 5 பேரையும், அழகப்பாபுரம் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.