மதுரையின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் (Gandhi Memorial Museum), பொதுப்பணித்துறையின் மரபுக் கட்டடங்கள் வட்டம் (சென்னை) மற்றும் கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம் (மதுரை) மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பழமை மாறாத புனரமைப்பு, சீரமைப்பு மற்றும் நவீன மேம்பாட்டுப் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.07.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மின்சாரப் பணிகள் மற்றும் காட்சியகப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி, மிக உயர்ந்த தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும்.
அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கும் சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மகாத்மா காந்தியடிகளின் நினைவுகளைப் போற்றும் பாரம்பரியக் காட்சிப் பொருட்களைப் பாதுகாப்பான முறையில் மறுசீரமைப்பு செய்து, நேர்த்தியாகக் காட்சிப்படுத்த வேண்டும் எனத் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறையின் கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் திரு. கே.அழகிரிசாமி, காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் கு.ரா.நந்தா ராவ், காந்தி நினைவு அருங்காட்சியகப் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.





