• Sat. Apr 20th, 2024

மைசூரில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பலாத்காரம்… தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!

கடந்த 24-ந்தேதியன்று, கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதியில், காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனும் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்த கூட்டு பலாத்கார சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. பிரதாப் ரெட்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், சாமுண்டி மலை அடிவாரத்தில் மதுபானம் அருந்திய மர்மநபர்களே இந்த கற்பழிப்பு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் நேற்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 24-ந்தேதி நானும், கல்லூரி மாணவியும் சாமுண்டி மலை அடிவாரத்துக்கு சென்றோம். அங்குள்ள ஒரு பாறை மீது அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், எங்களை சுற்றி வளைத்து கிண்டல் செய்தனர். இதனைத் தட்டிக்கேட்ட என்னை கல்லால் தலையில் தாக்கினர். இதனால் நான் சுயநினைவை இழந்து மயங்கினேன். பின்னர் நினைவு திரும்பி எழுந்தபோது காதலி அங்கு இல்லை. 4 பேர் மட்டும் என்னை சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் என் காதலி எங்கே என்று கேட்டேன். அப்போது அவர்கள் 4 பேரும் உனது வீட்டுக்கு போன் செய்து ரூ.4 லட்சம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்களிடம் காதலியை முதலில் காட்டுங்கள் என்று கூறினேன். இதையடுத்து அவர்கள், காதலியை என் முன் கொண்டு வந்தனர். அவருடைய உடல் முழுவதும் நக கீறல்கள் இருந்தன. அவர் அழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய நிலையை பார்க்கும்போதே அவர் கற்பழிக்கப்பட்டதை புரிந்து கொண்டேன். அந்த சமயத்தில் யாரோ அந்த வழியாக வந்துள்ளனர். இதனால் மர்மநபர்கள் எங்களை விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னர் அந்த வழியாக வந்த பொதுமக்கள் உதவியுடன் நாங்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் வந்து சேர்ந்தோம்| என்றார்.
இந்நிலையில், மைசூரு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கர்நாடகாவில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்துவந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 17 வயது நிரம்பியவர் என தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் மாயமாகியுள்ளதாகவும், அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *