தென் தமிழகத்தின் பிருந்தாவனம் என்று அழைக்கக்கூடிய வைகை அணை பூங்கா, கொரோணா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் மூடப்பட்டது.
இதனால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தென் மாவட்டங்களின் முக்கிய சுற்றுலாத்தலமான வைகை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தன.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனோ தொற்று படிப்படியாக தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. இதை அடுத்து தடைகளும் ஒவ்வொன்றாக குறைக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி மூடப்பட்டிருந்த வைகை அணை நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
எப்போ, எப்போ என்று மக்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று மாலை திடீரென பூங்க திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ,ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் வைகை அணையில் நுழைவு சீட்டை எடுத்துக்கொண்டு ,கார்மேகம் சூழ மழை வருமா ?வராதா? என்ற ஒருவிதமான ரம்மியமான சூழ்நிலையில், நீர்த்தேக்கத்தின் அழகையும் , நீர் வழிந்தோடும் வேகத்தையும் ரசித்தனர். வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வைகை ஆற்றில் தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருப்பதால் வலதுகரை மற்றும் இடதுகரை பூங்காக்களை இணைக்கும் சிறிய பாலத்திற்கு செல்ல தடை விதித்ததோடு, தீவிர கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.