சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை, ஆங்கிலத்துறை மற்றும் தமிழியல்துறை ஆகிய துறைகள் இணைந்து, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

நிகழ்வின் தொடக்கமாக, ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் .பாலமுருகன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்ததாக இருப்பதால் மாணவர்கள் கல்வியுடன் தனித்திறன்களையும் வளர்த்துக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்வியுடன் பல்துறைத் திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் மாணவர்களே வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் கணிதத் திறனறி வினாடி வினா, கணிதப் புதிர் தீர்த்தல், ஒரு நிமிடப் பேச்சுப் போட்டி, மாதிரிக் காட்சி, சொற்களஞ்சியப் போட்டி, பேனாவில் ஓவியம், நாட்டுப்புறப் பாடல், தொடர்புபடுத்துதல், மௌன மொழி, நினைவாற்றல் சோதனை உள்ளிட்ட 10 போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பள்ளிகளில் இருந்து 547 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிவகாசி, இந்து நாடார் விக்டோரியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், சிவகாசி இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழி கல்வி) இரண்டாம் இடத்தையும் பெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவாக, தமிழியல் துறைத்தலைவர் அமுதா நன்றி கூறினார்.




