மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தமிழக அரசின் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மூன்று வேளாண் சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்றும், மண்ணையும் விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை என்றும் தீர்மானத்தில் எடுத்துரைத்தார். வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை என்றும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் உள்ளதாகவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்று எழுச்சிமிகு போராட்டம் நடந்தது இல்லை, மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் பேரவையில் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.