கீழடியில் நடைபெற்று வரும் 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிற ஜாடி வடிவிலான மண்பாண்டம் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7 ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கீழடி அருகே உள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 2ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 14 ஆயிரம் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் ஏழு குழிகள் தோண்டப்பட்டு கல் உழவு கருவி, சுடுமண் பகடை, இரும்பு ஆயுதங்கள், விளையாட்டு பொருட்கள், சதுரங்க காய்கள், வட்டசில்லுகள், உறைகிணறுகள் மூடியுடன் கூடிய பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. தற்போது அடர் சிவப்பு நிறத்திலான மண்பானை கண்டறியப்பட்டுள்ளது. 36 செ.மீ வெளிப்புறமும், உட்புறம் 30 செ.மீ விட்டமும் கொண்ட இந்த பானையின் விளிம்பு இரண்டு செ.மீ தடிமன் உள்ளது. சிவப்பு வண்ண கொள்கலன் போன்ற அமைப்பில் காணப்படும் இவற்றின் பயன்பாடு தானியங்கள் சேமிப்பதற்காக உருவாக்கப்பட்டதா அல்லது வேறு என்ன மாதிரியான விஷயங்களுக்கு பயன்பட்டிருக்கும் என ஆய்வு நடத்தி வருகின்றனர்.