அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் தற்போது செயல்படுகிறது.இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகள் மீது மாறி மாறி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அடையாறு கிரவுண் பிளாசா நட்சத்திர ஓட்டலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் நாளை மறுநாள் நடை பெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை முறையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது. மேலும் சட்டசபையில் எதிர்கட்சி துணை தலைவர் பதவி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. துணை தலைவர் நியமனம் மற்றும் சபாநாயகருக்கு கடிதம் கொடுப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.