குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனா்.
மெட்டல் டிடெக்டா்கள் மூலம் வெடிகுண்டு நிபுணா்கள் பரிசோதனை நடத்துகின்றனா். கார் நிறுத்தம் பகுதியில் நீண்டநேரமாக நிற்கும் கார்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக சோதனையிட்டு விசாரணை நடத்துகின்றனா். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா். சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனவரி 30ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.