பழனி கோவிலில் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பணிகள் தொடர்பாக இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது…முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வருகிற 27-ந்தேதி பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையடுத்து 15 நாட்களுக்கு ஒருமுறை திருப்பணிகள் தொடர்பாக என்னை முதல்-அமைச்சர் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று திருப்பணிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதே போல பழனி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழனி கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி கும்பாபிஷேக பணிகளுக்கு பிறகு தொடரும். கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.