கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்பட்டதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது குறித்து இந்துத்துவா அமைப்பினர் சர்ச்சையை கிளப்பினர். இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டதால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனிடையே உடுப்பி மாவட்டம் குண்டாப்பூர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஹிஜாப் சர்ச்சை காரணமாக கடந்த வாரம் மூடப்பட்டது.
தற்போது கல்லூரி திறக்கப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் மட்டும் தனி வகுப்பறையில் அமரவைக்கப்பட்டனர். அதே நேரத்தில் குண்டாப்பூர் வெங்கடரமணா மற்றும் அரசு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவி துண்டை அணிந்து கொண்டு ஜெய்ஸ்ரீ ராம் முழக்கமிட்டபடி கல்லூரிக்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள் காவித்துண்டை அகற்றுமாறு அறிவுறுத்தினர். மேலும் கல்லூரி வாசலில் கர்நாடக அரசின் ஒரே சீருடை சட்டத்தின் நகல்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிஜாப் விவகாரம் காரணமாக சில கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிற மாவட்டங்களுக்கும் தற்போது பரவி வருகிறது. ஹிஜாப் தொடர்பான வழக்கு பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.