தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா.
இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.
இருப்பினும் தற்போது தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 14ஆம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவையொட்டி ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளால் கோயிலில் வழிபடவும் மலைமீது செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சூரிய உதயத்தை தரிசனம் செய்ய மலையடிவாரத்தில் பக்தர்கள் குவிந்தனர். அதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.