பொருளாதார நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது, இன்னும் 2 ஆண்டுகளுக்குமேலும் நெருக்கடி நீடிக்கும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜ பக்சேவும், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல தமிழ் குடும்பங்கள் வாழ வழியின்றி இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் மேலும் 2 ஆண்டுகள் அதற்கும் மேல் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என இலங்கை அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாவது:
இலங்கை முன்னேப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும்.இரண்டு ஆண்டுகளில் இந்த நெருக்கடியை எங்களால் தீர்க்க முடியாது, ஆனால் இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள் இந்த பிரச்சனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை தீர்மானிக்கும்.இலங்கையின் இறக்குமதியை சார்ந்து பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு நிதியளிப்பதற்கும் தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 50 மில்லியன் டாலர்களுக்கு குறைவாகவே நாட்டில் உள்ளது.
மக்கள் உண்மையை அறிய வேண்டும். நிலைமையின் தீவிரத்தை மக்கள் உணர்ந்து கொள்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதை தாமதப்படுத்தியதன் மூலம் அரசு தவறிழைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அரசு விரைவில் புதிய பட்ஜெட்டை வெளியிட்டு வருவாயை அதிகரிக்க வரிகளை உயர்த்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இலங்கை அரசின் இந்த அதிர்ச்சி தகவலால் மேலும் பல தமிழ்குடும்பங்களை தமிழகத்தை நோக்கி வரவைக்கும்.மேலும் இலங்கை நெருக்கடி மோசமாகும் பட்சத்தில் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம்.