கோவை: உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 500 மீட்டர் வரை ஆளில்லாமல் சென்ற விலை உயர்ந்த பைக் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம்–ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் விலை உயர்ந்த பைக்கில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கியது.
இதில், அந்த இளைஞர் மேம்பாலத்திலேயே கீழே விழுந்தார். ஆனால், அவர் சென்ற பைக் சுமார் 500 மீட்டர் தூரம் ஆளில்லாமல் சென்றது. இதனை அவ்வழியாகச் சென்ற மற்றொரு வாகன ஓட்டி தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.

மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அது தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்த விபத்து ஏற்பட்ட நேரத்தில் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.




