ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என அக்கட்சியின் வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14-ம் தேதி காலமானார். இதனையடுத்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 46 பேர் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள், பட்டாலியன் போலீசார் என 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் சூரம்பட்டி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று இன்று வாக்களித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆசியுடனும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நல்வாழ்த்துக்களுடனும், அமைச்சர் சு.முத்துசாமியின் வழிகாட்டுதலுடனும் சந்தித்துள்ளேன். இந்த இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். கடந்த நான்கு ஆண்டு கால திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களே இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கும். ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.