மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற மல்யுத்த வீரர். வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். உத்தரப் பிரதேச பாஜக எம்பியாகவும் உள்ள இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கடந்த ஜனவரி மாதமே இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைக் கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் இறங்கியுள்ளனர். அப்போது மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் விவசாயிகளும் இணைந்தனர். இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், அங்கே போராட்டம் நடத்தப் போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு கருதி டெல்லி எல்லைகளை போலீசார் மூடினர். இதை மீறி போராட்டம் நடத்த முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகளைக் கைது செய்த போது நடந்த குழப்பம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை போலீசார் சுற்றி வளைத்து இழுத்துச் செல்லும் நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 30 வயதான சாக்ஷி மாலிக்கை பெண் போலீசார் இழுத்துச் செல்வதும் பஜ்ரங் புனியா அவரை காப்பாற்ற முயல்வதும் பதிவாகியுள்ளது.
நமது நாட்டின் சாம்பியன்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை உலகம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்று சாக்ஷி மாலிக் இந்த வீடியோவை பகிர்ந்து சாக்ஷி மாலிக் பதிவிட்டுள்ளார்.