• Fri. Apr 26th, 2024

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா தொடங்கியது !

ByA.Tamilselvan

Jul 26, 2022

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை வெகு கோலாகலமாக கொண்டாடப்படும்.
இந்த திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொள்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, மிக எளிமையாக திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு, வழக்கம்போல் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பனிமய மாதா பேராலயத்தின் 440-வது ஆண்டு திருவிழா தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் இன்று (26-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த திருவிழாவையொட்டி தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.10-ம் திருவிழாவான வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 7 மணிக்கு, ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக, வரும் 5-ம் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.
அன்று மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. 11-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *