தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கோவை சேரன் மாநகரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் நாகராஜ், இருவரும் கொலை முயற்சி வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் இரண்டு பேரும் சிறையில் முதலில் யார் ஜாமினில் வெளியே செல்கிறார்களோ ? அவர் மற்றவருக்கு ஜாமீன் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என பேசிக்கொண்டனர். ஆனால் முதலில் ஜாமினில் வந்த வேல்முருகன் தனது நண்பர் நாகராஜனை 5 மாதமாகியும் ஜாமினில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் சிறையில் சந்திக்க வந்த தனது நண்பர்களிடம், வேல்முருகனை கடத்தி பணம் பறிக்கக் கூறியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து நாகராஜனின் நண்பர்கள் ஆறு பேர் கொண்ட கும்பல், கடந்த 18 ம் தேதி இரவு காரில் வேல்முருகன் டீக்கடைக்குச் சென்று உள்ளனர். பின்னர் வேல்முருகனை காரில் கடத்தி சென்று ரூபாய் 2 லட்சத்துக்கும் அதிகமான பணம் கேட்டு மிரட்டி தாக்கி உள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த வேல்முருகன் சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

அப்பொழுது அவர்கள் கிருஷ்ணகிரியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் கிருஷ்ணகிரி விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ஆறு பேர் கும்பலை மடக்கி பிடித்து கோவை அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த தர்மராஜ், செல்வூரைச் பகுதியை சேர்ந்த வெங்கட் பிரபு, தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து, தேனி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார், கோவை ரத்தினபுரிய சேர்ந்த சுந்தரமகாலிங்கம், பெங்களூரை சேர்ந்த சுஜி ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். சிறையில் உள்ள நாகராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.





