• Tue. Apr 30th, 2024

விருதுநகரில் அண்ணனுக்காக வாக்கு சேகரித்த தம்பி

Byவிஷா

Apr 13, 2024

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் விஜயபிரபாகரனுக்கு ஆதரவாக, அவரது தம்பி சண்முகபாண்டியன், அருப்புக்கோட்டையில் வாக்கு சேகரித்த போது, “அண்ணன் வெற்றி பெற்றால்தான் எங்களது தந்தை விஜயகாந்த்தின் ஆத்மா சாந்தி அடையும்” எனப் பேசியிருப்பது அனைவரையும் உருகச் செய்தது.
விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவரது தம்பியும், நடிகருமான சண்முகபாண்டியன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
இவர் அருப்புக்கோட்டை பாவாடி தோப்பு, காந்தி மைதானம், மதுரை ரோடு சிவன் கோயில், புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, எம்.எஸ்.கார்னர், நேரு மைதானம், அண்ணா திடல் மற்றும் ராமசாமிபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது..,
எனது அண்ணனுக்காக நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன். எனது தந்தை சாயலில் உள்ள எனது அண்ணனை வெற்றி பெறச் செய்தால்தான், எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையும். உங்களது அனைத்து பிரச்சினைகளையும் இந்த தொகுதியில் இருந்தே எனது அண்ணன் கேட்டு சரிசெய்வார்.
உங்களது தம்பியாக, உங்களது அண்ணனாக, உங்களது மகனாக விஜயபிரபாகரன் இந்த தேர்தலில் நிற்கிறார். எனவே, 4-வது பட்டனை அழுத்தி முரசு சின்னத்துக்கு வாக்களித்து, அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உருக்கமாகப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *