கோவை, கோவில்பாளையம் பகுதியில், சிக்கன் கடை ஒன்றில் புகுந்த வாலிபர் ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை லாவகமாகத் திருடிச் சென்ற வீடியோ வெளியாகி அப்பகுதி வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கன் வாங்குவது போல வந்து, கடைக்காரர் கவனிக்காத நேரத்தில் பணத்தை அபேஸ் செய்த அந்த வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பாளையம் பகுதியில் ஜெகநாதன் என்பவர் சிக்கன் கடை நடத்தி வருகிறார். கடந்த 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, ஜெகநாதன் கடையின் முன்புறம் நின்றபடி சிக்கனை வெட்டிச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளார். இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், சிக்கன் வாங்க வந்தவர் போல மெதுவாகக் கடைக்குள் நுழைந்து உள்ளார்.
ஜெகநாதன் வெளியே வேலை பார்த்துக் கொண்டு இருந்த இடைவெளியில், அந்த வாலிபர் கல்லாப்பெட்டியைத் திறந்து அதில் இருந்த 3,500 ரூபாயை எடுத்துத் தனது பாக்கெட்டில் திணித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கு இருந்து சென்று உள்ளார்.
சிறிது நேரம் கழித்துக் கல்லாவில் இருந்த பணத்தைச் சரி பார்த்த ஜெகநாதன், பணம் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது என்று தெரியாமல் புலம்பியவர், கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமராவை பார்த்த செய்த போது தான் உண்மை தெரியவந்தது. அதில், அந்த வாலிபர் மிகத் துணிச்சலாகப் பணத்தைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
இந்தச் சி.சி.டி.வி காட்சிகளை ஜெகநாதன் சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அது வைரலாகி வருகிறது.



