



டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான ‘இந்திரா பவனை’ அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.
புதுடெல்லியில் எண் 24, அக்பர் சாலை என்ற முகவரியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் ஏற்கனவே இயங்கி வந்தது. இந்நிலையில், கட்சிக்கு புதிய தலைமை அலுவலகம் 9 ஏ, கோட்லா சாலை, புதுடெல்லி என்ற முகவரியில் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவாக ‘இந்திரா பவன்’ என இந்த தலைமையகத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் இணைந்து ரிப்பன் வெட்டி தலைமையகத்தை சோனியா காந்தி இன்று காலை திறந்துவைத்தார். இவ்விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

