பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லியம்மன் திருவிழாவையொட்டி கடந்த மே 13-ம் தேதி காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கியது.

இதையொட்டி காப்பு கட்டுதல் முதல் தேரோட்டம் வரை நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான அதிகாலை 4 மணிக்கு மாரியம்மன் கோவில் முன்பு முத்து பல்லக்கு படுகளம் ரதத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் ஊர்வலமாக சுமந்து ஏரிக்கரையில் உள்ள மேனட்டாய் கோயிலுக்கு வந்தது.

தொடர்ந்து குடியழைப்பு நிகழ்ச்சியுடன் 1008 தீபந்தங்கள் ஏந்தி அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக வந்து சாவடி அருகே மண்டி பந்தலுக்கு அம்மன் வந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் முள்படுக்கையில் படுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம், ஆலத்தூர்கேட், இரூர், பாடாலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.