விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் பனையடிபட்டி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் உணவுக்காக வழி தவறி வந்த மான் கிணற்றுக்குள் விழுந்து தத்தளிப்பதாக பனையடிபட்டி கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) செண்பக ராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி அரை மணி நேரம் போராடி மானை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மானை உயிருடன் மீட்டது குறித்து சிவகாசி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் இரண்டு வயது உள்ள ஆண் மானை பத்திரமாக காட்டு பகுதியில் விட்டனர்.



