ஈரோடு, எஸ் கே சி ரோடு, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
குட்டி காவலர் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் எஸ் கே சி ரோடு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன் முதலாக தொடங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி தலைமையாசிரியர் கே. சுமதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு படை தேசிய பயிற்சியாளரும், குட்டி காவலர் திட்டத்தின் மாநில பயிற்சியாளருமான ஆர். என். பி. ராமநாதன் கலந்து கொண்டு திட்டத்தை துவக்கி வைத்து திட்டம் பற்றிய நோக்கத்தையும், செயல்பாடுகளையும் மாணவர்களிடம் விளக்கினார்.இளம் பள்ளி குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்றாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து கற்பித்து, அவர்களை சாலை பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும்.சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரப்பும் வகையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
அதன்படி “நான் இன்று முதல் குட்டி காவலராக பொறுப்பேற்கிறேன். நான் எனது பயணத்தின் போது சாலை விதிகளை கவனமாக கடைப்பிடிப்பேன் என்றும், எனது உறவினர்களையும், நண்பர்களையும் சாலை விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன் என்றும் உறுதி ஏற்கிறேன். ஓடும் பஸ்ஸில் ஏறவும் இறங்கவும் கூடாது என்பதை அறிவேன்.
இரு சக்கர வாகன பயணத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும்,நான்கு சக்கர வாகன பயணத்தில் இருக்கை பட்டை அணிய வேண்டும் என்றும் உணர்த்துவேன். இந்த சாலை பாதுகாப்பு உறுதிமொழியை முழுமையாக புரிந்து கொண்டு அதை உளமாற பின்பற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்” என்று கூறி மாணவ மாணவிகள்உறுதிமொழி எடுத்தனர்.
இன்று முதல் கட்டமாக 10 மாணவர்களுக்கு குட்டி காவலர் திட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் பட்டதாரி ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.