பஞ்சாப்பைச் சேர்ந்த விவசாயிகள், ரயில் நிலையங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் டெல்லி – அமிர்தசரஸ் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் வியாழக்கிழமை திருப்பி விடப்பட்டன.
டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பஞ்சாப்பின் பல இடங்களில் விவசாயிகள் தண்வாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் டெல்லி – அமிர்தசரஸ் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. விவசாயிகள் பலர் சுங்கச்சாவடிகளில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.
பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் விவசாயிகளைத் தடுத்து நிறுத்திய ஹரியாணா போலீஸார் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரதிய கிஷான் யூனியன் (எக்தா உக்ரஹான்) மற்றும் பிகேயு தகுன்தா (தனேர்) அமைப்புகள் பஞ்சாப்பில் வியாழக்கிழமை நான்கு மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு தண்டவாளங்களில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்படனர். இந்த மறியல் போராட்டம் மாலை 4 மணி வரை நடந்தது. டெல்லி அமிர்தசரஸ் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் ரயில்வே அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களை வேறு வழித்தடத்தில் திருப்பி விட்டனர். டெல்லி செல்லும் ரயில்கள் சண்டிகர் வழியாகவும், அமிர்தசரஸ் மற்றும் ஜலந்தர் பகுதிக்கு செல்லும் ரயில்கள் லோஹியன் காஸ் பகுதிக்கும் திருப்பி விடப்பட்டன.