மலேசியாவிலும், டெல்லியிலும் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு இறுதியில் வெள்ளிப்பதக்கங்கள் பெற்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியருக்கு சிவகங்கை இடையமேலூரில் பாராட்டு பேரணி நடைபெற்றது.
மாணவர்களின் தனித்திறமைகளை வலுப்படுத்தும் விதமாக மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள் ஒவ்வொரு விளையாட்டுகளுக்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு சிலம்பம் மற்றும் கிக்பாக்ஸிங் தொடர்பாக நடைபெற்ற அனைத்து அளவிலான போட்டிகளிலும் வெற்றிபெற்றவர்கள் சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சிபிஎஸ்இ பள்ளி மாணவர் இன்பென்ட் ஆல்வின் சுதன், மாணவி நித்திகா.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போர்க்கலை சாம்பிஷியன்ஷிப் போட்டிகளில் தமிழக அணி சார்பாக பங்கேற்று ஒற்றை சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பம் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் பெற்றவர் மாணவி நித்திகா. அதேபோல டெல்லியில் வாகோ இந்தியா சார்பில் நடைபெற்ற கிக்பாக்ஸிங் போட்டிகளில் தமிழக வீரராக களமிறங்கி வெள்ளிப்பதக்கம் பெற்றவர் இன்ஃபென்ட் ஆல்வின் சுதன்.
இப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவரும் இவ்விருவருக்கும் பள்ளிநிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா மிகச்சிறப்பாக இடைமேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இடையமேலூரில் திரளாக திரண்டிருந்த பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் இடையமேலூர் பஞ்சாயத்து தலைவர் சிவதாஸ், பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் ஆகியோர் மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அங்கிருந்து பள்ளி வளாகம் நோக்கி அனைத்து மாணவர்களும் பேண்டு வாத்தியங்கள் முழங்க பேரணியாக அழைத்து வந்தனர். இவ்விழாவில் கிக்பாக்ஸிங் பயிற்சியாளர் குணசீலன், சிலம்பம் பயிற்சியாளர் செந்தில், தேசிய, மாநில அளவில் வெற்றிபதக்கங்கள் பெற்ற இப்பள்ளி மாணவர்கள் மனுஶ்ரீ, ருத்வின் பிரபு, சாய்வின்பிரபு, நிகில் குமார், பள்ளியின் கலைத்திட்ட இயக்குநர் கங்கா கார்த்திகேயன் மற்றும் நகர்பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். பெற்றோர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் விழாவில் நன்றிதெரிவிக்கப்பட்டது.