

முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது குறித்து அடிக்கடி இடைக்கால மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று கேரள அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், அரசியல் நெருக்கடிகளை நீதிமன்றத்தில் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரி ஜோ ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான முல்லைப்பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கொச்சியை சேர்ந்த அறக்கட்டளை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேரள அரசு, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து குறைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில், கடந்த வாரம் கேரள அரசு கேரளாவில் மழை அதிகரித்தால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததை காரணம், காட்டி தமிழக அரசு இரவோடு இரவாக வினாடிக்கு 12,200 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதனால் அந்த பகுதியிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், முன்னறிவிப்பின்றி தண்ணீரை திறந்துவிட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா அரசின் சார்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் அனைத்து முன்னறிவிப்புகளும் கொடுத்துவிட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. 1.30 மணி நேரம் மட்டுமே வினாடிக்கு 12,200 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்றும், தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடுவதன் அளவு குறைந்த என தமிழக அரசின் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளை பொறுத்தவரை, ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைப்பது, பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து கேரள அரசு இதுபோன்ற இடைக்கால மனுக்களை தாக்கல் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று கண்டித்தனர்.
தண்ணீர் திறந்துவிடுவது போன்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றால் மேற்பார்வை குழுவிடம் தான் சென்று முறையிட வேண்டும். அவர்கள் தான் தண்ணீர் திறந்து விடுவது போன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்ய கூடாது. அது தவிர்க்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.