ஏடிஎம்-க்குள் சென்றால் பணம் இல்லை என்று தானே அதிர்ச்சியடைவோம் ஆனால்,தேவக்கோட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் எங்கு தொட்டாலும் ஷாக்கடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நடந்துள்ளது.
தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக இரவில் மழை பெய்துள்ளது. இதனால் தேவகோட்டை ராம்நகரில் எஸ்பிஐ வங்கியில் மழை நின்றபின் வழக்கறிஞர் ஆசை தம்பி என்பவர் தனது மகளுடன் பணம் எடுக்க சென்றுள்ளார். அவர்களுக்கு பணம் எடுக்கும் மிஷினை தொட்டவுடன் ஷாக்கடித்துள்ளது. மெல்ல நகர்ந்தவர் சுவற்றின் மீது கைவைக்க அங்கிருந்தும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசை தம்பி, தான் வைத்திருந்த டெஸ்டடரை எடுத்து அந்த ஏடிஎம் மையம் முழுவதும் வைத்து சோதனை செய்துள்ளார்.
அப்போது தான் அந்த அதிர்ச்சியான சம்பவத்தை ஆசை தம்பி உணர்ந்துள்ளார், அதாவது மின் கசிவின் காரணமாக கட்டிடம் முழுவதும் மின்சாரம் வருவது தெரியவந்துள்ளது. இதனை அங்கு உள்ளவர்கள் வீடியோ எடுக்க சமூக வலைதளங்களில் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக வழக்கறிஞர் ஆசைத்தம்பி புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் மின்வாரிய ஊழியர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து சரி செய்தனர்.