• Fri. Apr 26th, 2024

#BREAKING ரூ.15 கோடி ஒதுக்கீடு.. சற்று முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பொருநை என்ற அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அதில் கொற்கை, சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ் மாநிலத்துக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது; நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தது; ‘மெட்ராஸ்’ என்ற பெயரைச் ‘சென்னை’ என மாற்றியது; தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நிறைவேற்றியது; ஸ்ரீ, ஸ்ரீமதி என்ற சொற்களுக்கு மாற்றாக திரு, திருமதி ஆகிய சொற்களைச் சட்டப்பூர்வமாக ஆக்கியது: தலைநகரில் வள்ளுவர் கோட்டமும், குமரிமுனையில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது; திரும்பிய பக்கமெல்லாம் திருக்குறளைத் தீட்டியது; ‘தமிழ் வாழ்க.என எழுத வைத்தது; சிலம்பின் பெருமையைக் காட்டும் பூம்புகார் கோட்டம் அமைத்தது; தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது.

ஆட்சிமொழியாய் தமிழை முழுமைப்படுத்தியது; தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை பாடங்களைக் வெளியிட்டது; தமிழைக் கணினிமொழியாக்கியது; பிறமொழியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களை மாற்றியதுது; தமிழாசிரியர்களும் தலைமையாசியர் ஆகலாம் என உயர்த்தியது; உலகம் முழுவதும் தமிழைப் பரப்பியது; உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது; உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது; தமிழறிஞர் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியதும், அவர்களது குடும்பத்துக்கு இலட்சக்கணக்கில் நிதி உதவி செய்ததும் என, ‘தமிழ் அரசை’ நடத்தியதுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.

கடந்த நான்குமாத காலமாக, தி.மு.க. அரசு ஆற்றி வரும் தமிழ் பணியை மீண்டும் நான் உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை. இந்தியாவைத் தங்கள் குடையின்கீழ் கொண்டு வந்து மாமன்னர்கள் பலர் ஆண்டபோதும், தனிக்குடையின்கீழ் ஆளுகை செலுத்திய மண் இந்தத் தமிழ் மண். நாகரிகம் கொண்டது தமிழ் மண் என்பதற்கு சான்றுகள் பல கிடைத்துள்ளன. இவையெல்லாம் ஏதோ சில இலக்கிய ஆதாரங்களை வைத்து மட்டும் நான் சொல்லவில்லை. அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத சான்றுகள் ஆகும்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறது. பெறப்பட்ட இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளிலும், கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனத் தெரியவந்துள்ளது. முந்தைய அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கரிமப் பகுப்பாய்வுகளின் காலக் கணக்கீட்டு முடிவுகளின்படி, கி.மு. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பாகவே, கொற்கை ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்தது என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கைச் சமவெளியைச் சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதனை ஆய்வு செய்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் முனைவர் ராகேஷ் திவாரி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் ஆகியோர் கொற்கைத் துறைமுகமானது கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற Beta மியாமி நகரத்தில் உள்ள Analytical Laboratory-க்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. கிடைத்துள்ளன. AMS Carbon Dating முறையில் ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கண்டறியப்பட்டுள்ளது. ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக ஐந்து கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

மன்னர் இராசேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகிற்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழிநின்று நிறுவுவதே நமது அரசினுடைய தலையாய கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *