கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயனிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டின் இரண்டாவது சீசனை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இரண்டாவது சீசனுக்காக அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 12,000 மலர் தொட்டிகளில் சுமார் இரண்டு லட்சம் மலர்ச்செடிகளை மாடங்களில் காட்சிப்படுத்தும் பணி இன்று தொடங்கியது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இது குறித்து பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர், “நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்தத் தடையும் இல்லை தாராளமாக வரலாம். அதே சமயம் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து பாதுகாப்பான முறையில் சுற்றுலாவை கண்டுகளிக்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாக உள்ளது” என்றார்.