• Fri. Jan 24th, 2025

நாகப்பட்டினம் – இலங்கை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

Byவிஷா

May 16, 2024

நாளை நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளதால் பயணிகளிடையே எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது.
நாளை முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து சிவகங்கை என்ற பெயரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்கு முன்னர் நாகப்பட்டினத்திலிருந்து பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்தது. பொருளாதார மற்ற பல்வேறு காரணங்களால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயங்கிய கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 2023 அக்டோபர் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தக் கப்பல் இயற்கை சீற்றத்தை காரணம் காட்டி 20ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மத்திய அரசு இதன் அடிப்படையில் தமிழக அரசுடன் இணைந்து டெண்டர் விடப்பட்டது. இதனால் மீண்டும் கப்பல் போக்குவரத்து மே 13ம் தேதியில் இருந்து தொடங்கப்படும் என தெரிவித்தது. இதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் அந்தமானில் தயாராகி கடந்த மே 10ம் தேதி பிற்பகல் சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கு கப்பல் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு உட்பட சில பணிகள் நடைபெறுகிறது.

இதன் பிறகு மே 11ம் தேதி பிற்பகல் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர வேண்டிய சிவகங்கை கப்பல் மே 12ம் தேதி பிற்பகலுக்கு வந்து சேர்ந்தது. அதே போன்று கடந்த மே 13ம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட இருந்த கப்பல்  போக்குவரத்து நாளை மே 17ம் தேதி துவங்கும் என்று ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவித்த நிலையில், இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்கள், வர்த்தகர்கள் என பலரும் நாளை தொடங்க உள்ள கப்பல் பயணத்திற்கு முன்பதிவு செய்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.